Wednesday, March 10, 2010

பாக்., கிரிக்கெட்டுக்கு அவமானம்! *7 வீரர்களுக்கு தண்டனை

காரச்சி:  
பாகிஸ்தான் அணியில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சோயப் மாலிக், ராணாவுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு தடையாக இருந்த "சீனியர்கள்' முகமது யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் பாகிஸ்தான் சார்பில் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 7 வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் (பி.சி.பி.,) பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். அரசியல் தலையீடு மற்றும் "மேட்ச் பிக்சிங்' என தொடர்ந்து இடையூறுகள் ஏற்படும். இதனால் அணியின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்படும். சமீப காலமாக வீரர்களுக்குள் கோஷ்டி பூசல், போர்டுடன் மோதல் தவிர, "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபடுவது போன்ற செயல்கள் அதிகமானது.
இதன் உச்சக்கட்ட வெளிப்பாடு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் தெரிந்தது. மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு "டுவென்டி-20' போட்டிகள் என பாகிஸ்தான் அணி, தான் பங்கேற்ற 9 போட்டிகளிலும் தோல்வியடைந்து, வெறுங்கையுடன் நாடு திரும்பியது.
விசாரணை கமிட்டி:இதனால் அதிர்ச்சி அடைந்த பி.சி.பி., தோல்வி குறித்து விசாரிக்க, வாசிம் பாரி தலைமையில் ஆறு பேர்கள் கொண்ட கமிட்டியை அமைத்தது. அணியின் கேப்டன் முகமது யூசுப், பயிற்சியாளர் இன்தி காப் ஆலம், துணை பயிற்சியாளர், மானேஜர் மற்றும் 13 வீரர்கள் விசாரணைக்கு <உள்ளானார்கள். முடிவில் இந்த கமிட்டி, தனது அறிக்கையை பி.சி.பி.,யிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் மேல் நடவடிக்கை எடுக்கும் முன், இந்த அறிக்கை நேற்று மீடியாவில் வெளியானது.
இந்த அறிக்கை குறித்து பி.சி.பி., செய்தித் தொடர்பாளர் நதீம் சர்வார் கூறியது:
முகமது யூசுப், யூனிஸ் கான் இருவரும் அணியில் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே செயல்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும்பாதிக்கப்பட்டது. இவர்களை தேசிய அணியின் எந்த வித கிரிக்கெட்டிலும் பங்கேற்க விடக்கூடாது. தவிர, "டுவென்டி-20' ஆட்டத்தின் போது அப்ரிதி பந்தை கடித்தது மிகவும் அவமானச் செயல். இதனால் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு ஏற்பட்டது. இவருக்கு அபராதம் விதிப்பதுடன், 6 மாத காலத்துக்கு அப்ரிதியின் நடத்தையை கண்காணிக்க வேண்டும். இவர்கள் தவிர, சோயப் மாலிக், ராணா நவீது <உல் ஹசன், கம்ரான் மற்றும் உமர் அக்மல் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விபரம்:இதன்படி சோயப் மாலிக், ராணா இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு என எங்கும் கிரிக்கெட் விளையாட தடை மற்றும் 20 லட்ச ரூபாய் அபராதம், தவிர, அக்மல் சகோதரர்கள் மற்றும் அப்ரிதி ஆகிய மூவருக்கும் தலா 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. முகமது யூசுப், யூனிஸ் கான் இருவரும் தேசிய அணியில் விளையாட முடியாது. ஆனால் உள்ளூர் மற்றும் இங்கிலாந்து கவுன்டி, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கான கால வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் இவர்கள் அணிக்கு திரும்பலாம்.



எதிர்ப்பும், ஆதரவும்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட அதிரடி தடை மற்றும் அபராதத்திற்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே இரு மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. முன்னாள் வீரர்கள் தெரிவித்த கருத்துக்களில் சில:
இன்சமாம் உல் ஹக் (பாக்., முன்னாள் கேப்டன்)பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் வீரர்களான முகமது யூசுப், யூனிஸ் கான் இருவருக்கும் அளித்துள்ள தண்டணை ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர்கள் தவறு செய்திருந்தால், எச்சரிக்கை விடுத்திருக்கலாம். இதை தவிர்த்து விட்டு, ஆயுட் கால தடையை வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தவறு செய்த கம்ரான், உமர் அக்மல் மற்றும் அப்ரிதி ஆகியோருக்கு தற்போது தண்டணை வழங்கியிருப்பது தாமதமான செயல். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. தடை செய்யப்பட்டுள்ள வீரர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
ஜாகிர் அப்பாஸ் (முன்னாள் பாக்., வீரர்)முகமது யூசுப், யூனிஸ் கான் இருவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை, வருத்தம் அளிக்கும் விஷயம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு கிரிக்கெட் போர்டு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.
அப்துல் காதிர் (பாக்., முன்னாள் கேப்டன்)பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு எடுத்துள்ளது துணிச்சலான முடிவு. இந்த முடிவில் நிலைத்திருக்க வேண்டும். அது தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உகந்தது. சீனியர் வீரர்களுக்கு இந்தத் தண்டணை தேவையானது தான். அப்போது தான் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வர்.
மோசின் கான் (பாக்., தேர்வுக் குழு தலைவர்)தடை செய்யப்பட்டுள்ளவர்கள் அணியின் முன்னணி வீரர்கள். அவர்களுக்கு மாற்றாக தகுதியான வீரர்களை இடம் பெறச் செய்வது மிகவும் கடினம். இருப்பினும் கிரிக்கெட் போர்டின் முடிவை ஆதரிக்கிறேன்.


பாக்ஸ் செய்திகள்:
வரலாற்றில் முதல் முறை

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 7 வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது இது தான் முதல் முறை. கடந்த 2000 ல் சூதாட்ட சர்ச்சை தொடர்பாக சலீம் மாலிக் உள்ளிட்ட சில வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆஸ்திரேலிய தொடரில் அடைந்த தோல்விக்காக கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பி.சி.பி., மறுப்பு
யூசுப் மற்றும் யூனிஸ் கானுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மறுத்துள்ளது. இதன் சட்ட ஆலோசகர் தபாஜுல் ரிஸ்வி கூறுகையில்,""யூசுப் மற்றும் யூனிஸ் கான் ஆகியோர் உள்ளூர் மற்றும் அன்னிய மண்ணில் நடக்கும் கவுன்டி போன்ற போட்டிகளில் விளையாடலாம். பாகிஸ்தான் அணி சார்பில் மட்டுமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதனால் இது ஆயுட் தடை அல்ல,'' என்றார்.
பாக்., அணியின் எதிர்காலம்?தற்போது அணியில் விளையாடி வரும் 7 வீரர்கள் மீது, ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, அணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி <உள்ளது. அடுத்த மாதம் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில், வீரர்கள் மீதான தடைகள் அணியின், நலனை பாதிப்பது <உறுதி.
வீரர்களின் தடை விபரம்:
முகமது யூசுப் (35
)

பாகிஸ்தான் அணிக்காக 22 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வரும் இவர், 88 டெஸ்ட் (7431 ரன்), 282 ஒருநாள் போட்டிகள் (9624 ரன்) மற்றும் ஒரு "டுவென்டி-20' (20 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். பி.சி.பி.,க்கு எதிராக செயல்பட்டதால், இவருக்கு தேசிய அணியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூனிஸ் கான் (32) 

பாகிஸ்தான் அணியில் கடந்த பத்து ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், சிறந்த "மிடில் ஆர்டர்' வீரர். இதுவரை 63 டெஸ்ட் (5260 ரன்), 202 ஒருநாள் போட்டிகள் (5765 ரன்) மற்றும் 20 "டுவென்டி-20' (430 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கடந்த 2009 "டுவென்டி-20' உலக கோப்பை வென்று தந்தவர். பி.சி.பி.,க்கு எதிராக செயல்பட்டதால், இவருக்கு தேசிய அணியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்ரிதி (30)

அணியின் சிறந்த "ஆல் ரவுண்டரான' இவர் சமீபத்தில் "டுவென்டி-20' அணியின் கேப்டனானார். இவர், 26 டெஸ்ட் (1683 ரன்), 293 ஒருநாள் போட்டிகள் (5957 ரன்) மற்றும் 27 "டுவென்டி-20' (495 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை கடித்து சேதப்படுத்தியதால், அப்ரிதிக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவிர, இவரது நடவடிக்கை 6 மாத காலத்துக்கு கண்காணிக்கப்பட உள்ளது.
சோயப் மாலிக் (28)

சிறந்த பேட்ஸ்மேனான இவர், அவ்வப்போது பவுலிங்கிலும் அசத்துவார். 29 டெஸ்ட் (1517 ரன்), 190 ஒருநாள் போட்டிகள் (5141 ரன்) மற்றும் 30 "டுவென்டி-20' (603 ரன்) ஆட்டத்தில் விளையாடியுள்ளார். இவர், போர்டுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் கோஷ்டி சேர்த்தது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆண்டு தடை, 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராணா நவீது (32)
 
மிதவேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 9 டெஸ்ட் (18 விக்கெட்), 74 ஒருநாள் போட்டிகள் (110 விக்.,) மற்றும் 4 "டுவென்டி-20' (5 விக்.,) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவர், போர்டுக்கு எதிராக செயல்பட்டது மற்றும் கோஷ்டி சேர்த்தது போன்ற காரணங்களுக்காக ஒரு ஆண்டு தடை, 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கம்ரான் அக்மல் (28)

கடந்த 2002ல் அறிமுகமான இவர், 2004 முதல் ஐந்து ஆண்டுகளாக அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்தார். இதுவரை 48 டெஸ்ட் (2550 ரன்), 115 ஒருநாள் போட்டிகள் (2288 ரன்) மற்றும் 28 "டுவென்டி-20' (451 ரன்) ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், இவருக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
<உமர் அக்மல் (19)

சமீபத்தில் அணியில் இடம் பெற்று அசத்தி வந்த இவர், இதுவரை 6 டெஸ்ட் (578 ரன்), 15 ஒருநாள் போட்டிகள் (498 ரன்) மற்றும் 6 "டுவென்டி-20' (159 ரன்) ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், இவருக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment