Thursday, March 11, 2010

இன்று ஐ.பி.எல்., கோலாகல துவக்கம்

மும்பை:  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல்., தொடர், பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் இன்று ஆரம்பமாகிறது. பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனேவின் நடனம், சர்வதேச "பாப்' நட்சத்திரங்களான லயோனல் ரிச்சி, அலி கேம்பல், பிஜோர்ன் அகேன் ஆகியோரது பாடல்கள், வண்ணமயமான "லேசர் ஷோ', என துவக்க விழா, களை கட்ட உள்ளது.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் துவக்க விழா, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகிறது. முதலில் 8 அணிகளின் கேப்டன்கள் சேர்ந்து அம்பயர்கள் மற்றும் எதிரணி வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர். பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், கிரிக்கெட் உணர்வுடன் நடந்து கொள்வோம் என்றும் கையெழுத்திடுகின்றனர்.
தீபிகா ஆட்டம்:
அடுத்து ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. பிரிட்டனை சேர்ந்த முன்னணி பாடகர் அலி கேம்பல் தனது குழுவினருடன் சேர்ந்து ஆடிப் பாடுகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிஜோர்ன் அகேன் தனது "டேன்சிங் குயின்' பாடலை பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். ஐ.பி.எல்., தொடர் மீண்டும் இந்தியாவில் நடப்பதை குறிக்கும் விதமாக 240 கலைஞர்கள் சேர்ந்து அசோக சக்கரத்தை போல அணிவகுக்க உள்ளனர். பாலிவுட் கவர்ச்சி நாயகி தீபிகா படுகோனே மற்றும் 40 கலைஞர்கள் சேர்ந்து இந்தி பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி, ரசிகர்களை கிறங்கடிக்க உள்ளனர். இறுதியாக பாப் உலகின் ஜாம்பவானான அமெரிக்காவை சேர்ந்த லயோனல் ரிச்சி தனது பிரபலமான "டான்சிங் ஆன் த சீலிங்' என்ற பாடலை பாடுகிறார். "லேசர் ஷோ' மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கையுடன் துவக்க விழா நிறைவு பெறுகிறது.
பலத்த பாதுகாப்பு:
பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து துவக்க விழா மற்றும் முதல் போட்டி நடக்கும் டி.ஒய்.பாட்டீல் மைதானத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் தவிர, ஆயிரம் தனியார் பாதுகாப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தண்ணீர் பாட்டில், தீப்பெட்டி, கூர்மையான மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், பெரிய "பேக்' போன்றவற்றை மைதானத்துக்குள் எடுத்து வர ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-------


கங்குலி-கில்கிறிஸ்ட் அணிகள் மோதல்


துவக்க விழா முடிந்ததும், இத்தொடரின் முதல் மோதலில் நடப்பு சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கடந்த முறை கடைசி இடம் பெற்ற கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இரு அணிகளிலும் முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற முடியாதது பின்னடைவான விஷயம்.
கங்குலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் கோல்கட்டா அணி உற்சாகமாக காணப்படுகிறது. ஆனாலும் பிரண்டன் மெக்கலம்(நியூசி.,), கிறிஸ் கெய்ல்(வெ.இ.,), டேவிட் ஹசி(ஆஸி.,), ஷேன் பாண்ட்(நியூசி.,) போன்றவர்கள் பங்கேற்க முடியாதது ஏமாற்றமே. இவர்கள் தற்போது, தங்களது நாட்டு அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். அஜித் அகார்கர் காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் கோல்கட்டா அணி இலங்கையின் "சுழல் மாயாவி' மெண்டிசை தான் அதிகம் சார்ந்துள்ளது.
டெக்கான் அணியின் பலம் கேப்டன் கில்கிறிஸ்ட் தான். கிப்ஸ், வாஸ், சைமண்ட்ஸ் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா இருப்பதால் பந்துவீச்சும் வலுவாக இருக்கிறது.
கடந்த 2008ல் நடந்த முதலாவது தொடரில் கோல்கட்டா அணி, டெக்கான் அணியை இரு முறையும் வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக 2009ல் நடந்த இரண்டாவது தொடரில் டெக்கான் அணி இரு போட்டிகளிலும் கோல்கட்டாவை வீழ்த்தியது. இம்முறை முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராடும்.
http://www.dinakaran.com/latestphoto/ipl-season3/index.html

No comments:

Post a Comment