Friday, March 5, 2010

பாரத ரத்னா விருது பற்றிய கருத்து: தெண்டுல்கருக்கு பால் தாக்கரே பாராட்டு

மும்பை, மார்ச். 5-
மும்பை அனைவருக்கும் சொந்தம் என்று தெண்டுல்கர் கருத்து கூறியதை அடுத்து அவரை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது. கட்சி தலைவர் பால்தாக்கரே தெண்டுல்கரை விமர்சித்து கட்டுரை எழுதினார்.
தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்ததை அடுத்து நாடே அவரை பெரிதும் பாராட்டியது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சிவசேனாவும் பழைய விஷயங்களை மறந்துவிட்டு தெண்டுல்கரை பாராட்டி உள்ளது.
இது தொடர்பாக பால்தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
தெண்டுல்கருக்கு ஏற்கனவே இந்தியாவில் 100 கோடி மக்களும் “பாரத ரத்னா” என்ற மகுடத்தை சூட்டிவிட்டார்கள்.
வீர சிவாஜி போர் களத்தில் முகலாயர்களை வீழ்த்தினார். அதேபோல் தெண்டுல்கர் கிரிக்கெட் களத்தில் மாவீரராக திகழ்கிறார். இது போன்ற மாவீரர்கள் மராட்டிய மண்ணில் மட்டும்தான் தோன்றுவார்கள்.
சிவாஜி வாள் ஏந்தி இருந்தார். தெண்டுல்கர் “பேட்” ஏந்தி இருக்கிறார். தெண்டுல்கர் ஏற்கனவே பாரத ரத்னா ஆகிவிட்டார். அவருக்கு இந்த விருதை கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வது தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment