Monday, March 15, 2010

தொடக்கத்தில் விக்கெட் சரிந்ததால் தோற்றோம்: கேப்டன் டோனி பேட்டி

சென்னை, மார்ச். 15-
 
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர் கொண்டது.
 
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 31 ரன்னில் தோற்றது.
 
முதலில் ஆடிய டெக்கான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. சைமண்ட்ஸ் 50 ரன்னும், கிப்ஸ் 45 ரன்னும், கில்கிறிஸ்ட் 38 ரன்னும் எடுத்தனர்.
 
பின்னர் ஆடிய சென்னை சூப்பர்கிங்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. கேப்டன் டோனி அல்பி மார்கல் தலா 42 ரன் எடுத்தனர். சமிந்தாவாஸ் 21 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். அவர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.
 
போட்டி முடிந்ததும் டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
20 ஓவர் போட்டியில் 191 ரன் இலக்கு என்பது கடின மானதே. எங்கள் அணியில் ஹைடன், சுரேஷ்ரெய்னா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்ததால் இலக்கை எட்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்து விட்டதால் தோல்வி அடைந்தோம்.
 
மேலும் பிற்பகுதியில் ஆடுகளம் மெதுவான பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் ரன்களை அதிரடியாக எடுக்க முடியவில்லை.
 
தொடக்க ஆட்டத்திலேயே தோற்றதால் எங்கள் அணியை சாதாரணமாக நினைக்க கூடாது. 160 ரன்கள் வரை நாங்கள் எடுத்துள்ளோம். இன்னும் நிறைய ஆட்டங்கள் இருக்கிறது. அதில் சென்னை சிறப்பாக விளையாடும்.
 
சென்னையை சேர்ந்த இளம் வீரர் அஸ்வினின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. பல போட்டிகளில் விளையாடி அவர் தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
இவ்வாறு டோனி கூறினார்.

No comments:

Post a Comment