Monday, February 22, 2010

மிதக்கும் சூப்பர் மார்க்கெட்



கோழிக்கோடு : கேரளாவின் கோழிக்கோடு கடல் கழிமுகப் பகுதியில் மிதந்து வரும் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க கிராமத்தினர், சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கோழிக்கோடு மாவட்டம் குட்டன்காடு பகுதியில் கடல் நீரின் கழிமுகப் பகுதி (பேக் வாட்டர்) உள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரி உண்டு. அத்துடன், கோழிக்கோடு பகுதியை இந்த கடல் நீர் இரண்டாக பிரிக்கிறது.
எனவே, நீரைச் சுற்றியுள்ள 53 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் படகில் போய் பஸ்சைப் பிடித்து கோழிக்கோடு போக வேண்டியிருந்தது. இந்த சிரமத்தை தவிர்ப்பதுடன், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் டூ&இன்&ஒன் திட்டத்தை கேரள சுற்றுலாத் துறை செயல்படுத்தியது.
மாநில கூட்டுறவு பண்டகசாலை மூலம், குட்டன்காடு பகுதியில் நீரில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் அரிசி, பருப்பு போன்ற மளிகை சாமான்கள், டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டுச் சாதனங்கள், அழகு சாதனங்கள் என சகலமும் விற்பனைக்கு உள்ளது.
இதனால், 53 கிராம மக்கள், படகில் மறு கரை சேர்ந்து பஸ்சில் சென்று பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, மிதக்கும் சூப்பர் மார்க்கெட் மீது ஆர்வம் காட்டுகின்றனர். இந்த படகு சூப்பர் மார்க்கெட்டில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை விற்பனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு கிராமத்தின் கரைப் பகுதிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் இந்த சூப்பர் மார்க்கெட் வரும். அதற்கான நேரம் முன்கூட்டி அறிவிக்கப்படுகிறது.
இதில் கிடைக்கும் பொருட்கள் தவிர, மக்கள் ஆர்டர் தரும் பொருட்களும் வீடு தேடி டெலிவரி செய்யப்படுகிறது.
மிதக்கும் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களின் வெளிச் சந்தை விலையை விட 15 சதவீதம் வரை விலை குறைவு. இதனால், கிராமத்தினர், சுற்றுலா பயணிகள் இடையே அதற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மேலும் 3 மிதக்கும் சூப்பர் மார்க்கெட்களை அமைக்கும் பணியில் கேரள சுற்றுலாத் துறை, கூட்டுறவுத் துறை ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment