Monday, February 22, 2010

கவிதை

உன்னோடு காடொன்றுக்குள்
வழிதவறி அலைந்த கனவை
இப்பொழுதும் நான் கண்டேன்
அடிக்காலில் கூச்சங்கள் காட்டியபடி
நம்மை ஏதேதோ பூச்சிகள் விரட்டித் துரத்தின
நடந்துவந்த சிங்கமொன்று நம்மை
சீட்டு விளையாட வாவென அழைத்தது
உயிர் தேயும் அச்சம் கலைந்த நாம்
வனராசாவின் தாடி பின்னி
சீட்டுகளால் அலங்கரித்து
செல்லமாக விளையாடினோம்
சட்டெனக் காடு
கடலாகிற்று

நாம் மூழ்கிடாவண்ணம்
ஒட்டகச் சிவிங்கிகளிரண்டு நம்மை
தம் நீள் கழுத்திலேற்றிக் கொண்டன
அழுத சிங்கத்தைத் தேற்றி
உலக எல்லை வரை கடலுக்குள்ளால்
சிவிங்கிகளின் கழுத்துக்களைப் பற்றியபடி
நாம் போகத் துவங்கினோம்
கடல் கன்னி நீயென
ஏதோ ஒரு நீரினம் உன்னைச் சொன்னது
என்னைக் குறித்து
என்ன சொன்னதென நினைவில்லை
நாளைய கனவில்
கேட்டுச் சொல்கிறேன்
இப்பொழுது நீ உறங்கு

No comments:

Post a Comment