Monday, February 22, 2010

இளம் மாணவர்களுக்கான தேசிய விருது கிராமத்து விஞ்ஞானிகள்


நுனி நாக்கு ஆங்கிலம், நவீன நாகரிகத்தின் சாயல் எதுவுமின்றி "மதுரை அச்சம்பத்து பகுதியில் ஆட்டோக்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து' ஆய்வு செய்த "வேர்கள்' அமைப்பு மாணவர்கள் தேசிய விருது பெற்று உள்ளனர். "வேர்கள்' அமைப்பின் மூலம் அச்சம்பத்து பகுதி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல், அறிவியலை எளிமையாக எடுத்துக் கூறி ஆர்வத்தைத் தூண்டுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என மாணவர்களை பண்படுத்தி வருகிறார் பேராசிரியர் பாலகிருஷ்ணன்.

ஆய்வு குறித்து பேராசிரியர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: அறிவியல் துறையில் ஆய்வு செய்வதற்காக குஜராத்தில் உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ், இளம் மாணவர்களுக்கு (10 - 17 வயது) தேசிய விருது வழங்கி வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் "துளிர்கள்' அமைப்பின் மூலம் விண்ணப் பித்தோம். இந்தாண்டுக் கான "சுற்றுச்சூழலில் மனிதனின் தாக்கம்' தலைப்பின் கீழ், அச்சம்பத்து பகுதியில் ஆட்டோக்களால் ஏற்படும் பிரச்னைகளை ஆய்வு செய்ய மாணவர்களை தூண்டினேன் என்கிறார்.

மாணவர்கள் மதிவாணன், நவநீதகிருஷ்ணன், பாலமுருகன், சதீஷ்குமார், அணித்தலைவி நவீனா கூறியதாவது: அச்சம்பத்து ரோட்டின் முன்பாக, துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இப்பகுதியில் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 90 முறை லக்கேஜ் ஆட்டோக்கள் செல்கின்றன. ஆட்டோ வரும் போது 80 - 120 டெசிபல் அளவுக்கு இரைச்சல், ஹாரன் சத்தம் ஏற்படுத்துவதால், நரம்பு தளர்ச்சி, கோப உணர்ச்சி, செவிட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. வீட்டுக் கதவு, ஜன்னல், ரோட்டில் தூசி படியும் விகிதத்தை கணக்கில் எடுத்தோம். தூசியால் தலையில் பொடுகு, இருமல், ஆஸ்துமா ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 90 ஆட்டோக்களில் 720 பேர் பயணம் செல்கின்றனர். ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 60 பேர் வீதம் 12 பஸ்களை இயக்கினால் போதும். புகை, இரைச்சல், தூசி போன்ற சுற்றுச்சூழல் மாசு பெருமளவு குறைந்துவிடும். உடல்நலமும் பாதிக்கப்படாது. முக்கியமாக போக்குவரத்து நெருக்கடி குறையும். நான்கு மாத ஆய்வை சமர்ப்பித் தோம். தெற்காசியாவிலிருந்து பெறப்பட்ட 600 ஆய்வுகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் இளம் விஞ்ஞானி பட்டம் பெற்றோம். விருதுபெற்ற பின், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியுடன் டீ அருந்தினோம். ஆய்வுக் கான செலவுகளுக்கு "வேர்கள்' அமைப்பின் மூலம் பேராசிரியர் பாலகிருஷ்ணன் உதவினார், என்கின்றனர் இம்மாணவர்கள்.

No comments:

Post a Comment