Thursday, February 25, 2010

பிராட்மேனை மிஞ்சிய சச்சின்: வீரர்கள் புகழாரம்




புதுடில்லி: ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் விளாசிய முதல் வீரரான சச்சினுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இவரது கால் தொட்டு வணங்க, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பான் பிராட்மேனை காட்டிலும் சச்சின் தான் சிறந்த வீரர், என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
குவாலியரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடியாக பேட் செய்த சச்சின், 200 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார். சுமார் 40 ஆண்டு கால ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் எடுக்கும் முதல் வீரரான இவர், மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். 36 வயதான நிலையில், மிக நீண்ட நேரம் விளையாடியது இவரது உடலுறுதியை காட்டியது.
கிரிக்கெட் கடவுள்:
இது குறித்து பிரிட்டன் மீடியா வெகுவாக புகழ்ந்துள்ளது. பி.பி.சி., வெளியிட்டுள்ள செய்தியில்,""கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து சச்சின் நிகழ்த்திய சாதனை பிரம்மிக்க வைத்தது. ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடியது அவரது உடல் வலிமையை சுட்டிக் காட்டியது,'' என குறிப்பிட்டுள்ளது. பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தியில்,""கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் சாதனையை அனைவரும் பாராட்ட வேண்டும. 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது,'' என குறிப்பிட்டுள்ளது.
சச்சின் சாதனை குறித்து பல்வேறு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் புகழ்ந்து கூறியது:
கவாஸ்கர்(இந்தியா): சர்வதேச கிரிக்கெட்டில், சச்சினை போல் 93 சதங்கள் மற்றும் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் வேறு யாரும் எடுக்கவில்லை. இவரை போன்ற சாதனையாளரின் கால் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன். சச்சினுக்குள் எப்போதுமே ஒரு சிறுவனின் உணர்வு உண்டு. அந்த உணர்வு தான் தொடர்ந்து சாதிக்க தூண்டுகிறது. இவரது அகராதியில் "போதும்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 450 ரன், ஒரு நாள் போட்டிகளில் 250 ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். பின் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 2011ல் உலக கோப்பை கைப்பற்ற வேண்டும்.
வெங்கசர்க்கார்(இந்தியா): ஒரே நாளில் சச்சின் 200 ரன்கள் எடுத்துள்ளது வியக்கத்தக்க விஷயம். இந்த இலக்கை வெறும் 147 பந்துகளில் எட்டியது அவரது மனம் மற்றும் உடல் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. தனது விக்கெட்டை வீணாக இழக்க மாட்டார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விட்டால் மிகப் பெரும் இலக்குகளை எளிதாக எட்டி விடுவார்.
அஜித் வடேகர்(இந்தியா): சச்சின் சாதனைக்காக விளையாடுவதில்லை. சாதனைகள், அவரை தேடி வருகின்றன. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி வருகிறார். இவரது, "சூப்பர் பார்மை' பார்க்கும் போது, 2011ல் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றுவது உறுதி.
நாசர் ஹூசைன்(இங்கிலாந்து): பொதுவாக வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. ஆனாலும், குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த போது, கவாஸ்கர், ஆலன் பார்டர், லாரா, பாண்டிங்கை காட்டிலும் சிறந்த வீரராக தோன்றினார். தவிர, ஆஸ்திரேலிய "பேட்டிங் பிதாமகன்' பிராட்மேனை காட்டிலும் மிகச் சிறந்த வீரராக காட்சி அளித்தார்.
இம்ரான் கான்(பாகிஸ்தான்): ஒரு நாள் போட்டிகளில் சேவக் தான் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், இச்சாதனையை சச்சின் படைத்துள்ளார். இவர் நிறைய சாதனைகள் படைத்திருக்கலாம். அதில், 147 பந்தில் 200 ரன்கள் என்பது மிகவும் "ஸ்பெஷல்'. இதனை ஒரு அற்புதமான வீரர் நிகழ்த்திய அதிசயமாக கருதுகிறேன்.
சயீத் அன்வர்(பாக்.,): கடந்த 1997ல் சென்னையில் நான் 194 ரன்கள் விளாசி சாதனை படைத்த போது, சச்சின் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது முதல் ஆளாக என்னை பாராட்டினார். பதிலுக்கு இப்போது, எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது சாதனை 13 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். தற்போது 200 ரன்கள் விளாசி சாதித்துள்ள சச்சின், தன்னை நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அடையாளம் காட்டியுள்ளார்.
இதுவே ஆசை:
"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் கூறுகையில்,""நான் சாதனைக்காக கிரிக்கெட் விளையாடவில்லை. காலப் போக்கில் சாதனைகள், தானாகவே வருகின்றன. குவாலியர் போட்டியில் 175 ரன்களை எட்டிய போது, 200 ரன்களை எடுக்கலாம் என மனதில் தோன்றியது. சாதனைகள் முறியடிப்பதற்கே என கூறுவதுண்டு. இதன் அடிப்படையில் எனது சாதனையை, இந்திய வீரர் ஒருவர் தகர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்,''என்றார்.
அஞ்சலி பெருமிதம்:
சச்சின் சாதனையை அவரது குடும்பத்தினர் முழுமையாக காண முடியவில்லையாம். பள்ளி தேர்வு நடப்பதால் மகள் சாரா, மகன் அர்ஜூன் ஆகியோர் மாலை முழுவதும் படித்துள்ளனர். இவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் தான் மனைவி அஞ்சலி அதிக கவனம் செலுத்தியுள்ளார். அஞ்சலி கூறுகையில்,""இரட்டை சதம் அடித்த விஷயத்தை "போன்' மூலம் கூறி இன்ப அதிர்ச்சி தந்தார் சச்சின். கிரிக்கெட் மீதுள்ள பக்தி தான் அவரது சாதனைகளுக்கு முக்கிய காரணம்,''என்றார்.
சாதனைக்கு அங்கீகார:
சச்சின் சாதனை படைத்த குவாலியர் ரூப் சிங் மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, ம.பி.,யில் உள்ள "சிட்டி சென்டர்-ஹுரவாலி' சாலைக்கு சச்சின் பெயர் வைக்கப்படும் என முதல்வர் சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.
லோக்சபாவில் பாராட்டு:
சாதனை நாயகன் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் வாசித்த செய்தியில்,"" ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த உலகின் முதல் வீரர் என்ற, மகத்தான சாதனை படைத்த சச்சின், தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இது இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். எதிர்காலத்திலும் சச்சின் இதுபோன்று சாதிக்க வாழ்த்துக்கள்,'' என தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் வாழ்த்து
உலக சாதனை படைத்த சச்சினுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
சச்சினுக்கு முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி: குவாலியரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த உங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முந்தைய சாதனைகள் அனைத்தையும் நீங்கள் கடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அருமையான உலக சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தாங்கள் கூறியதால், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தேசமே தங்களால் மிகவும் பெருமைப்படுகிறது.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சச்சின் "நம்பர்-3'
ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலை, ஐ.சி.சி., துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சச்சின் (766 புள்ளி) மூன்று இடங்கள் முன்னேறி, "நம்பர்-3' இடம் பிடித்தார். இதற்கு குவாலியர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து சாதித்ததே காரணம். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய கேப்டன் தோனி (827), முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (809), இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ஹர்பஜன் சிங், தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார்.
இந்தியா "நம்பர்-2':
அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (115), மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஐ.சி.சி., சார்பில் வழங்கப்படும், ரூ. 35 லட்சம் பரிசு இந்திய அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

No comments:

Post a Comment